வெள்ளி, 11 நவம்பர், 2011

தமிழ்மொழி கற்பித்தலில் வாசிப்புத்திறனின் பங்கு


கற்றல் - கற்பித்தல்

முனைவர் மா. தியாகராஜன்


4. தமிழ்மொழி கற்பித்தலில் வாசிப்புத்திறனின் பங்கு

முன்னுரை

நீட்டோலை வாசியானை நெடுமரம் என்றார் தமிழ்ப்பெரு மூதாட்டி ஒளவையார். இதன் வாயிலாக பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வாசிப்புஎன்ற சொல்லாட்சியின் ஆளூமையும், அதன் அவசியமும் உணர்த்தப்- பட்டுள்ளதை அறிந்திட இயலும். படித்தல், வாசித்தல் என்ற சொற்கள் ஒரே பொருளையே விளக்குகின்றன.

செந்தமிழும் நாப்பழக்கம்என்பதைத் தமிழுலகம் அறியும். தமிழ் மொழியைப் புலம் பெயர்ந்த மக்கள் வாழும் நாடுகளில் வளர்ச்சியடையச் செய்ய வேண்டுமெனில், மொழித்திறன் வளர் பயிற்சியில் முக்கியமாகப் படித்தல் திறனை மாணவர்களிடையே எளிய வழிகளைப் பின்பற்றி போதித்தலின் வாயிலாக சிறந்த நிலையை எய்த இயலும்.

வாசிப்புத்திறனின் பயன்கள்

ஒரு மனிதனைச் சந்திக்கின்ற பொழுது என்ன படிக்கிறாய் என்றோ அல்லது என்ன படித்திருக்கின்றாய் என்றோதான் கேட்கிறோம். பெரும்பாலான பகுதிகளில் திருமண நிகழ்வின் போது கூட பெண் என்ன படித்திருக்கின்றாள், மாப்பிள்ளை என்ன படித்திருக்கின்றார் என்றோதான் கேட்கிறோம். அந்தக் கேள்வியின் பொருள் கல்வித்தகுதியை உணர்த்துகிறது. இருப்பினும், படித்தல் அல்லது வாசித்தல் என்றால் இங்கே வாய் மொழியால் நாம் பெறுகின்ற மொழியறிவைத் தெளிவாக உணர்த்துகிறது.

கண்டதைப் படித்தால் பண்டிதனாகலாம்என்ற அனுபவக் கூற்றை நாம் இங்கே சிந்திக்க வேண்டும். கண்டது என்றால் கண்ணில் படுபவையெல்லாம் என்று பொருளாகும். அவ்வாறு, கண்ணில் பட்டதையெல்லாம் படித்தால் பண்டிதராக முடியுமா? என்றால், முடியும். படித்துத் திறன் வளர, வளர அறிவு வளர்ச்சி கூடுதல் அடையும். சொல்லாட்சி, சொல்வளம் முதலியவை மனதில் நிற்கும்.

வாசிப்புத் திறனை வளர்ப்பது எப்படி?

தேமதுர தமிழோசை உலகமெல்லாம் பரவி வகை செய்தல் வேண்டும்’, என்றார் மகாகவி பாரதி. அத்தகைய தேன் போன்ற இனிமையுடைய தமிழ்மொழியைப் பேசுகின்றவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. இதற்குக் காரணம் நவநாகரீக உலகில் ஆங்கில மொழியின் தாக்கம் தமிழ் மொழியை அதிகம் பேசுவதில் ஆர்வம் காட்டாத தமிழர்களின் மனப்போக்கு இத்தகைய சூழ்நிலையில், தமிழை, அதன் படிப்புத்திறனை வளர்ப்பதெற்கென்று கல்வியியல் சிந்தனையாளர்கள் பல்வேறு கருத்துரைகளை வழங்கி வருகின்றனர். படிப்புத்திறன் ஒரு சில இடையூறுகளைக் கொண்டுள்ளது. அது என்ன இடையூறு?

1.
தமிழ் எழுத்துக்கள் குறில், நெடில் எனப் பிரிக்கப்பட்டுள்ளது. குறிலுக்கு ஒரு மாத்திரை என்றும், நெடிலுக்கு இரண்டு மாத்திரை என்றும், அளவுமுறை கையாளப்படுகிறது. வாசிப்புத்திறன், இத்தகைய ஒலிப்பு அளவீட்டு முறையைப் பின்பற்றி வளர்க்கப்பட வேண்டும்.

2.
மாணவர்கள் வகுப்பறையில் பாடத்தை (உரைநடை) காற்புள்ளி, அரைப்புள்ளி, முக்காற்புள்ளி, முற்றுப்புள்ளி, நிறுத்தற்குறி, வினாக்குறி, ஆச்சர்யக்குறி, ஒற்றை மேற்கோள் இரட்டை மேற்கோள், முதலிய ஏற்ற இறக்கப் பொருள் மாறுபாடு ஆகியவற்றை உணர்ந்து படிப்பதற்கு ஆசிரியர்கள் வழிகாட்டியாய் இருக்க வேண்டும்.

3.
படித்தல் திறன் வளர்ச்சிக்கு செய்யுள் வகுப்புகள் தமிழாசிரியர்களால் திறம்பட கையாளப்பட வேண்டும். செய்யுள் வகுப்புகளைக் கையாளுகின்ற மொழியாசிரியர்கள் முதலில் தாங்கள் செய்யுள் பிரித்துப் படித்துக் காட்டுதல் வேண்டும். முடிந்தால் இசையோடு பாடியும் காட்டலாம். அவ்வாறு ஒருமுறைக்கு இருமுறை படித்துக் காட்டிவிட்டு மாணவர்களைப் படிக்கச் செய்தல் வேண்டும். மாணவர்கள் அவ்வாறு பிரித்துப் படிக்கும் பொழுது உச்சரிப்பு ஏற்ற இறக்கம், பொருள் முதலியவற்றைப் பின்பற்றுகிறார்களா என்பதை மொழியாசிரியர்கள் கவனிக்க வேண்டும்.

வாசிப்புத்திறனின் நோக்கங்கள்

வாசிப்பதன் மூலம் எழுத்துக்களைக் கூட்டிப் பொருளை அறிகின்ற ஆற்றல் வளர்கிறது. மொழி கட்டமைப்பிலுள்ள ண,ன- ல,,ழ- ர,ற முதலிய எழுத்துக்களை சொற்களின் இடையில் வைத்து, வேறுபாடறிந்து உச்சரிக்கப் பழகுதல் முதலிய பயன்களே நோக்கங்கள் ஆகும்.

வாசிப்புத்திறனை மேம்படுத்த எளிய, புதிய யோசனைகள்

இன்றைய அறிவியல் யுகத்தில் பல்வேறு சாதனங்கள் படிப்புத்திறனை வளர்ப்பதற்கு துணை நிற்கிறது. இச்சூழலில் படிப்புத்திறனை வகுப்பறையில் மாணவர்களிடம் வளர்த்திட எளிய வழிகள் ஏராளமாய் உள்ளது.

1.
இன்றைய தினம் அனைவரும் தொலைக்காட்சிகளில் செய்திகளைக் காணுகின்ற வழக்கம் உடையவராய் இருக்கின்றோம். சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இத்தகைய வாய்ப்பும், பழக்கமும் அதிகமாக உள்ளன.

2.
மேற்கண்ட வாய்ப்பைப் பயன்படுத்தி மாணவரே குழுக்களாகப் பிரித்து ஒரு குழுவினரைப் பார்வையாளராகவும் மற்றொரு குழுவினரைச் செய்தி அறிவிப்பாளராகவும் பிரித்து செய்தித்தாட்களிலுள்ள செய்தி வெட்டுகளைச் சேகரித்து வரிசைப்படுத்தி வாசிக்கச் சொல்லலாம். இவ்வாறு செய்வதன் மூலம் வாசிக்கின்ற மாணவர் ஆர்வத்துடனும், கவனத்துடனும் வாசிப்பான். கேட்கின்ற குழுவில் உள்ளவர்கள் குறைகள் இருந்தால் சுட்டிக் காட்டலாம். இதன் மூலம் இரண்டு குழுக்களுக்கும் மாறி மாறி வாய்ப்பு கிட்டும். இதனால், ஒவ்வொருவரும் பிழையின்றி வாசிக்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர். படிப்புத்திறன் எளிதில் வளரும். இவ்வாறு செய்தி வாசிக்கும் மாணவர் தன்னை ஒரு செய்தி வாசிப்பாளராகவே எண்ணிக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தன்னம்பிக்கையும், உச்சரிப்புத்திறனும் வாசிக்கும் ஆற்றலும் பெருகும்.

மேலும் சில விளையாட்டு முறைகள்

சாலைகளில் உள்ள விளம்பரப் பலகையைக் கவனிக்க அதிலுள்ள எச்சரிக்கைகளைப் படிக்கும் பழக்கம், பேருந்து நிலையங்களிலுள்ள கால அட்டவணைகளைப் படித்தல். மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் வைக்கப்பட்டுள்ள விதவிதமான விளம்பரப் பலகைகள் முதலியவற்றின் மாதிரிகளை அட்டைகளில் தயார் செய்து, வகுப்பறைகளில் அத்தகைய சூழலை உருவாக்கிப் படிக்கச் செய்தல்.

1.
இங்கே வாகனங்களை நிறுத்தக்கூடாது

2.
ஒரு வழிப் பாதை

3.
சாலைப்பணி நடைபெறுகிறது, கவனமாகச் செல்லவும்

4.
அனைத்துப் பொருள்களும் குறைந்த விலையில் கிடைக்கும்

போன்றவை. மேலும், ‘ஒன்று இங்கே, மற்றொன்று எங்கேஎன்ற தலைப்பில் விளம்பரங்களை ஒரு அட்டையில் எழுதி அதை இரண்டாக வெட்டி, அது போல பல விளம்பர அட்டைகளைச் சேகரித்து வெட்டிக் கலந்து வைக்க வேண்டும். குழுவினரை ஆளுக்கொன்று எடுக்கச் சொல்லி - தலை இங்கே, வால் எங்கேஎன்று கேட்டு விளையாடலாம்.

எ.காலிட்டில் இந்தியாஎன்ற அட்டையை இரண்டாக வெட்டினால் லிட்டில் / இந்தியா என்று ஆளுக்கொரு அட்டை பிரிந்து விடும். இதனை எடுத்த மாணவர் படித்து லிட்டில்இங்கே, இந்தியா எங்கே? என்று கேட்டால், இந்தியா இங்கே, என்று கூறி இணைய வேண்டும்.

i)
சிங்க நட னத் திருவி ழா - இதனை பொருள் மாறாமல் வார்த்தைகளை இடம் விட்டு எழுதுமாறு சொல்ல, அதனை உரக்க படித்து இணைத்தல்.

ii)
பூங்காவில் உள்ள புல் தரையில் நட க்கா தீர்.

மேற்கண்டவாறு நிறைய விளம்பரங்களை, எச்சரிக்கைகளைச் சேகரித்து வாசிப்புத் திறனை மேம்படுத்தலாம்.

சுக்கு, மிளகு, திப்பிலி என்ற மருந்துப் பெயர்களை படிக்கத் தெரியாதவன் படிக்கும் போது, ‘சுக்குமி ளகுதி ப்பிலிஎன்று படித்ததாகக் கூறுவார்கள். இது எத்தனை வேடிக்கையாக உள்ளது. அதனால்தான் படிக்கும் பயிற்சி முக்கியமானதாக இருக்கிறது. அதனை முறையாக வளர்க்க வேண்டியதும் அவசியமாக இருக்கிறது.

தனி வேலை

வாசிப்புத் திறன் வளர்ச்சிக்கு தனிவேலை என்று வரும்போது, செய்தித்தாள், மாத இதழ், வார இதழ், போன்றவைகளில் வருகின்ற செய்திகள், நகைச்சுவைத் துணுக்குகள், சிறுகதைகள், வினாடி-வினா பகுதிகள் முதலியவற்றைச் சேகரித்து அவற்றைப் படிக்கும் பழக்கத்தைத் தொடர்ந்து பெறுதல்.

இணை வேலை

இணைஎன்றால் இணைந்து செயல்படுதல். ஒருவருக்கு இருவர் துணைஎன்று சொல்வார்கள். இணைந்து செயல்படும் போது ஒருவருக்கு ஒருவர் புதிய புதிய யோசனைகளைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. அத்துடன் வாசிப்புத் திறனில் எற்படும் குறைபாடுகளைச் சகமாணவர் சுட்டிக்காட்டும் வாய்ப்பும் அத்தகைய தவறு தனக்கு ஏற்படாமல் இருக்கவும் பயன் தருகிறது.

குழு வேலை

மாணவர்கள் எப்போதும் நண்பர்களோடு சேர்ந்து கூட்டமாக இருப்பதையே பெரிதும் விரும்புகிறார்கள். இந்தச் சூழலைப் பயன்படுத்தி வாசிப்புத் திறனை எளிதாக வளர்க்க முடியும். நூல்களின் பெயர்கள், ஊர்களின் பெயர்கள், திரைப்படங்களின் பெயர்கள், தலைவர்களின் பெயர்கள், திரைப்பட நட்சத்திரங்களின் பெயர்கள், விளையாட்டு வீரர்களின் பெயர்கள், முதலியவற்றைச்சேகரித்து அவற்றை அட்டைகளில் எழுதி கையில் தூக்கிப் பிடித்துக் கொள்ளச் செய்து குழுக்களில் உள்ளவர்கள் ஒவ்வொருவராக அதனைப் படிக்கச் செய்தல் வேண்டும். அத்துடன், அவற்றோடு தொடர்புடைய செய்திகளையும் கூறச் செய்தல் வேண்டும்.

கிரிக்கெட் (அட்டை 1) சச்சின் (அட்டை 2)

கேள்வி இந்தியாவின் (கிரிக்கெட்) நட்சத்திர ஆட்டக்காரர் யார்?

திருக்குறள் (அட்டை 1) திருவள்ளுவர் (அட்டை 2)

உலகப்பொதுமறையாம் திருக்குறளை இயற்றியவர் யார்?

மேற்கண்டவாறு தொடர்புடைய அட்டைகளைக் குழுவினர்களிடையே கொடுக்க வேண்டும். அவர்களே முயன்று அட்டைகளைத் தயாரிக்க ஆசிரியர் வழிகாட்டலாம். இத்தகைய முயற்சிகளால் வாசிப்புத் திறன் நன்கு வளரும்.

பார்வை நூல்கள் விவரம்

1. தமிழ் பயிற்றும் முறை, டாக்டர் ந.சுப்பு ரெட்டியார், மெய்யப்பன் தமிழாய்வகம் வெளியீடு, சிதம்பரம், டிசம்பர்2000.

2.
நற்றமிழ் கற்பிக்கும் முறைகள், வி.கணபதி, சந்திரிகா ராஜமோகன் சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை, 2002.

3.
கார்த்திகேயன் கம்பெனி, (1970), கற்பித்தல் பொது முறைகள், ஏசியன் பிரிண்டர்ஸ், சென்னை.

4. Sandra Siberstein, 1994 Techniques And Resources in Teaching Reading. Oxford university Press.

5. Wendy A.Scott and Lisbeth H.treberg Teaching, 1990 English to Children.Longman

6. H.Clark, 1986, Secondary And Middle School Teaching Methods, Fifth Edition, Macmillan Publishing Company, New York.

7.
கோவிந்தசாமி, நா.,(1986), வாசிப்புக் கற்பித்தல்: தமிழ்ப் பள்ளியின் வரலாறு 1946-1982.

8.
கோபால் மீராபாய், (1979), Diagnostic Test of Reading Comprehension Skills at Secondary School Level, RELC.

9.
லாவ் டெக் இங், (1975), கோடிட்ட இடத்தை நிரப்புதல் வழி மெளன வாசிப்புக் கற்பித்தல், ஆங்கிலமொழி நிலையம், சிங்கப்பூர்.

10.
வாங் கிம் லாவ், (1979), Measuring Readability of Reading Comprehension Materials in English, RELC.

1 கருத்து: