சனி, 1 செப்டம்பர், 2012

தமிழ்மொழிக் கற்றல் -http://thirutamil.blogspot.in/2011/10/1.html

இந்தக் கட்டுரையானது, தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலுக்கு இணையத்தை எவ்வாறு பயன்கொள்ள முடியும் என்பதையும்; இணையம் தொடர்பான ஏந்துகளைத் (வசதிகள்) தமிழ்மொழி கற்றல் கற்பித்தலுக்கு எவ்வாறெல்லாம் பயன்படுத்த முடியும் என்பதையும் ஆராய்கின்றது. மற்ற எல்லாத் துறைகளையும் போலவே, இணையம் கற்றல் கற்பித்தலிலும் மிகப்பெரிய உருமாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. மரபு வழிசார்ந்த கற்றல் கற்பித்தல் அணுகுமுறைகள் குடியிருந்த வகுப்பறைகளில், தற்போது நவினமான அணுகுமுறைகள் இடம்பிடித்துள்ளன. இணையம் வழியான கல்வி முறை ஆசிரியர்களின் கற்பித்தலிலும் மாணவர்களின் கற்றலிலும் புதிய வகைப் பரிணாமங்களை உண்டாக்கிக் கொடுத்திருக்கின்றன. எளிமை, விரைவு, விரிவு, விளைபயன், ஈர்ப்பு, மனமகிழ்வு, பல்லூடகம் முதலான தன்மைகளைக் கொண்டிருப்பதால், இணையம் வழியான கல்வி முறை இன்றையக் காலத்திற்கு மிகவும் ஏற்றதாகவும் தவிர்க்க இயலாத ஒன்றாகவும் ஆகிவிட்டது. தவிர, கற்றல் கற்பித்தலுக்கு உதவும் வகையில் பலவகையான இணைய ஏந்துகள் (வசதிகள்), செயலிகள், மென்பொருள்கள், வலைத்தளங்கள் முதலியவை நிறைய வந்துவிட்டன. இணையத்தைப் பயன்படுத்தி தமிழ்மொழியைக் கற்கவும் கற்பிக்கவும்கூடிய வழிவகைகள் அறிந்து செயல்படுத்த வேண்டும். மொத்தத்தில், தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தையும் இணைய ஏந்துகளையும் முறைப்படுத்தித் திட்டமிட்டுச் சரியாகப் பயன்படுத்தினால் நன்மை விளையும் என்பதில் ஐயமில்லை.


1.0   முன்னுரை
தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் மிக விரைவான வளர்ச்சி கல்வித் துறையிலும் மிகப் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கணினியையும் இணையத்தையும் பயன்படுத்தாத கல்வி நிறுவனங்களே இல்லை என்கின்ற அளவுக்குத் தொடக்கப் பள்ளி தொடங்கி உயர்க்கல்விக் கழகங்கள் வரையில் எல்லா இடங்களிலும் இதன் ஆதிக்கம் பெருகி வருகின்றது. இத்தகையச் சூழலில், கற்றல் கற்பித்தலில் இணையமும், இணைய ஏந்துகளும் முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டன எனலாம். கோலின்சு (1996) என்பார் கூற்றின்படி, 1996 / 1997ஆம் ஆண்டுகளிலேயே கற்றல் கற்பித்தலில் இணையம் ஊடுருவி வளர்ந்துவிட்டது என்கிறார்.
இதன் அடிப்படையில், இணையம் வழியான கற்றல் கற்பித்தல் முறைமை இன்று மிகவும் புகழ்பெற்றதாகவும் எல்லாராலும் விரும்பப்படுவதாகவும் இருக்கின்றது. ஆகவேதான், இணையத்தைப் பயன்படுத்தி கற்றல் கற்பித்தலை வழிநடத்துவதற்கு உலகம் முழுவதிலும் உள்ள எல்லாக் கல்வி நிறுவனங்களும், தனியார், தன்னார்வ நிறுவனங்களும் முண்டியடித்துக்கொண்டு முயற்சிகளை முன்னெடுக்கின்றன. 
 
இணையத்தின் வழியாக அல்லது செயலிகள், மென்பொருள்கள், வலைத்தளங்கள், மின்னிதழ்கள், ஒலி ஒளி மின்னூடகங்கள், மடற்குழுக்கள், சமூக வலைத்தளங்கள் முதலான இணைய ஏந்துகள்  வழியாகத் தமிழ்மொழியைக் கற்கவும் கற்பிக்கவும் வேண்டிய தேவைகள் அதிகரித்து வருகின்றன. ஆகவே, காலத்திற்கு ஏற்ற வகையில் புதிய அணுகுமுறையில் தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலை மேம்படுத்த வேண்டும். அதற்குரிய விரிவான வாய்ப்புகள் இன்று உருவாகி இருப்பதை ஊக்கத்துடன் வரவேற்று விரிவாகப் பயன்கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக