திங்கள், 26 ஆகஸ்ட், 2013

விவேகானந்தர்-பொன்மொழிகள்

          விவேகானந்தரின் பொன்மொழிகள்
இந்த உலகில் அரியது எது எனக் கேட்டால் அது மானிடப்பிறவி என்று துணிந்து கூறலாம். அத்தகைய பிறவி எடுத்த நாம் இந்த உலகிற்கு நம்மால் ஆன உதவிகளைச் செய்து வாழ்தல் வேண்டும்.
இந்த உலகைத் திருத்த வல்ல உயிர்த் தூண்கள்
1.ஆசிரியர்
2. எழுத்தாளர்
3. பெற்றோர் எனத் துணிந்து கூறலாம்.
இத்தகைய சிறப்பு படைத்தவர் எவ்வாறு வாழவேண்டும் என்பதை விவேகானந்தர் தெளிவாக விளக்கியுள்ளார்.
சமூகத்தில் 
மதிக்கத்தக்க பதவி எனப் போற்றப்படுபவர்  
1.ஆசிரியர்
2.வழக்குரைஞர்
3.காவலர்
4.மருத்துவர் 
இத்தகைய பணியினை மேற்கொண்டோர் வாழ்வில் தனக்கென வாழாது பிறர்க்கென வாழும் மனப்போக்குடன் வாழ்தல் அவசியம். சமூகத்தில் நடைபெறும் சீர்கேடுகளைக் களைவதில் உறுதியாக ஈடுபடவேண்டும்.பெண்கள் தெய்வத்திற்கு ஒப்பாக மதிக்கப்படவேண்டியவர்கள். அத்தகைய பெண்கள் வீட்டில் மட்டும் விளக்கேற்றமட்டும் பயன்படவேண்டியவர்கள் அல்ல என்பதை ஆண்கள் உணர்ந்து செயலாற்ற வேண்டும். வெறும் சதைகளால் ஆன இவ்வுடம்பின் மேல் வெறும் ஆசை கொண்டு இயங்கும் ஆணினம் முற்றிலும் தன்னை மாற்றிக்கொண்டு செயல்படவேண்டும்.
இவ்வுலகம் இன்றிருக்கும் நிலையில் வெறும் ஆணினத்தால் மட்டும் பண்பாட்டினையும், உறுதியான, வலிமையான நல்உள்ளங்கள் நிறைந்த சமுதாயத்தையும் உருவாக்கிட இயலாது. 
பெண்ணினத்தினை மதிக்கும் நாடு எல்லா வளமும் பெற்றுத் திகழும் . 
இத்தகைய சிந்தனைகள் நிறைந்த விவேகானந்தரின் பொன்மொழிகள் நமது வாழ்க்கைக்கு வளம் கூட்டும்.

நியாயத்தை எடுத்துச் சொல்வதில் கோழையாக இராதீர்கள். உலக நன்மைக்காக சண்டை செய்வதில் வீரராக இருங்கள்.
* உங்களை ஏழை என்று நினைக்காதீர்கள். பணம் ஒரு சக்தியல்ல. நன்மையும் தெய்வபக்தியுமே சக்தி. 

* இந்த உலகில் தோன்றிய நீங்கள் அதற்கு அடையாளமாக ஏதேனும் விட்டுச் செல்லுங்கள். இல்லையேல் உங்களுக்கும் கற்களுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்.

* தனியாக இருந்து கொண்டு பலருடைய பகையை தேடிக் கொள்பவன் அறிவற்ற மூடனைப் போன்றவன். 

* செல்வம் பெருகிய காலத்தில் ஒருவனுக்கு பணிவு வேண்டும். அதே சமயம், செல்வம் குறைந்து வறுமை வரும் காலத்தில் பணியாத துணிவு வேண்டும்.

* கடின உழைப்பு இல்லாமல், பெரிய காரியங்களைச் சாதிக்க முடியாது.
* பிறருக்காகச் செய்யும் சிறுமுயற்சி கூட, நமக்குள் இருக்கும் சக்தியை எழுப்பி விடும். பிறருக்காக சிறு நன்மையை மனதில் நினைத்தாலும், சிங்கத்தின் பலம் நமக்கு உண்டாகும்.
*
செல்வமும், புகழ்வாழ்வும், உலக போகமும் சில நாள்களுக்கே. எனவே ஆசையில் மூழ்கிக் கிடக்க வேண்டாம். கடமையைச் செய்து களத்தில் உயிரை விடுவது தான் நன்மை.
*
ஒருவரிடமும் பொறாமைப்படக் கூடாது. நன்மை செய்ய விரும்புவோருக்கு கை கொடுக்கத் தயாராகுங்கள். உலக உயிர்களை நேசித்து சகோதர உணர்வுடன் வாழுங்கள்.
*
ஏழைகள், பலமற்றவர்கள், நோயுற்றவர்கள் ஆகியோரிடம் சிவனைக் காண்பவனே உண்மையில் கடவுளை வழிபடும் பேறு பெற்றவன். கோயிலில் சிவனைக் கண்டு வணங்குபவனை விட, சேவை செய்பவனையே சிவன் நேசிக்கிறார்.
*
உள்ளத்தில் உறுதி, பேச்சில் இனிமை, இதழில் புன்னகையோடு எப்போதும் இருங்கள். மனத்தளர்வு தரும் விஷயங்களில் மனதைச் செலுத்துவது கூடாது.
* நம்மைப் பற்றி எண்ணாத நேரத்தில் மட்டுமே, உண்மையான வாழ்க்கையை அனுபவிக்கிறோம்.
*
துன்பப்புள்ளியாக தோன்றும் இந்த மனிதப்பிறவியே, மகான்களைப் பொறுத்தமட்டில் பயிற்சிப் பள்ளியாக அமைந்து நெறிப்படுத்துகிறது.
*
தியாகம் செய்யுங்கள். பிறரின் உள்ளத்தை வெல்லும் சக்தி தியாகத்திற்கு மட்டுமே உண்டு.
*
கோழையும், முட்டாளும் விதி என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஆனால், ஆற்றல் மிக்கவனோ "விதியை நானே வகுப்பேன்' என்று சபதம் செய்வான்.
*
முதலில் உங்களிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். பிறகு கடவுளிடம் நம்பிக்கை வையுங்கள். இதன் மூலம் எதையும் சாதிக்கும் வல்லமை பெறுவீர்கள்.
*
அன்பின் மூலமாகவே கடமை இனிதாக முடியும். சுதந்திரமான நிலையில் மட்டுமே அன்பு தன் பூரணத்தன்மையுடன் பிரகாசிக்கும்.
*
உங்களின் பலவீனத்தை எண்ணுவதால் பலன் சிறிதும் விளையாது. பலவீனத்திற்குப் பரிகாரம் பலத்தை நினைப்பது மட்டுமே.

* தொண்டாற்ற விரும்புபவர்கள் சொந்த விருப்பு வெறுப்புகளை மூட்டை கட்டி கடலில் தூக்கி எறிந்து விட்டு, கடவுளிடம் சரணாகதி அடைந்து விடவேண்டும்.
*
தற்பெருமை சிறிதும் வேண்டாம். பொறாமைப்படுவதும் கூடாது. பூமித்தாயைப் போல பொறுமையுடன் பணியாற்றுங்கள். உலகமே உங்கள் காலடியில் கிடக்கும்.
*
எந்த வேலையையும் ஒழுங்கு, அமைதியுடன் செய்ய பழகுங்கள். குறிக்கோளை நிர்ணயித்துக் கொண்டு அதைநோக்கிய பயணமாக வாழ்வை அமைத்துக் கொள்ளுங்கள்.
*
செல்வம், புகழ், சுகபோக வாழ்வு இவையெல்லாம் சில காலம் மட்டுமே. உலக ஆசையில் மூழ்கி விடாதீர்கள்.
*
முயற்சியுடன் உழைத்தால் நம்மிடம் பெருஞ்சக்தி உண்டாவதை உணரமுடியும். பிறருக்காகச் செய்யும் சிறு முயற்சி கூட, சிங்கத்தின் பலத்தை தந்து விடும்.
*
மனத்தளர்ச்சி சிறிதும் கூடாது. எப்போதும் இனிமையோடும், மனஉறுதியோடும் இருக்கப் பழகுங்கள். இது பிரார்த்தனையை விட முக்கியமானது.

* மனதிற்குள் புதைந்திருக்கும் பரிபூரணத் தன்மையை வெளிப்படுத்துவது தான் கல்வி. வெறும் புள்ளி விபரங்களை சேகரிப்பது கல்வியல்ல. மனதை ஒருமுகப்படுத்துவதே அதன் அடிப்படை லட்சியம்.
*
ஒவ்வொரு மனிதனும் கட்டளையிடவே விரும்புகிறான். கீழ்ப்படிவதற்கு யாரும் தயாராக இல்லை. முதலில் கீழ்ப்படிய கற்றுக் கொள். கட்டளையிடும் பதவி தானாக வந்து சேரும்.
*
சிரத்தையோடு செயல்படுவது தான் இப்போது நமக்கு அவசியமான ஒன்று. மனிதனுக்கு மனிதன் வேறுபடுத்திக் காட்டுவது இந்த சிரத்தை மட்டுமே.
*
மனவலிமையுடன் சிரத்தை கொண்டவர்களாக மாறுங்கள். கேலி பேசுவது, புறம் பேசுவது, வீண்பொழுது போக்கு அம்சங்களில் கவனம் செலுத்துவதை அறவே கைவிடுங்கள்.
* "
சீர்திருத்தம்' என்ற வார்த்தையைச் சொல்லத் தேவைஇல்லை. மாறாக "முன்னேறிச் செல்' என்று சொல்லுங்கள். சூழ்நிலைக்கு ஏற்ப வாழ்க்கையை அமைத்துக் கொண்டு முன்னேறுங்கள்.

* எல்லா இடங்களிலும் கடவுள் நிறைந்துஇருக்கிறார். காணும் எல்லாப் பொருள்களிலும் பரம்பொருளைக் காண முயலுங்கள்.
*
குறிக்கோளுக்குச் செலுத்தும் முக்கியத்துவத்தை அதை அடைய மேற்கொள்ளும் பாதைக்கும் செலுத்துவது அவசியம்.
*
நல்லதையே சிந்தியுங்கள். நல்லதை மட்டுமே செய்யுங்கள்.
*
கண்டன வார்த்தை எதையும் சொல்ல வேண்டாம். உதடுகளை மூடிக் கொண்டு உங்கள் இதயங்களைத் திறந்து வையுங்கள்.
*
விரிந்து கொண்டே செல்வது தான் வாழ்க்கை. மனம் குறுகிக் கொண்டு செல்வதை மரணம் என்று தான் சொல்ல வேண்டும்.
*
சில நேரங்களில் துன்பமே மனிதனுக்கு சிறந்த ஆசிரியராக அமைந்து விடுகிறது.
*
நல்ல மனிதனை உருவாக்குவதில் இன்பமும் துன்பமும் சரிசமமான இடத்தை வகிக்கின்றன.
*
மனத்தூய்மை மிக்கவர்கள் இந்த பிறவியிலேயே கடவுளைக் காணும்பேறு பெறுகிறார்கள்.

* நீங்கள் ஒவ்வொருவரும் மகத்தான பணிகளைச் செய்யப் பிறந்தவர்கள் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள்.
*
உண்மை, நேர்மை, அன்பு இந்த மூன்றும் ஒருவரிடம் இருக்குமானால் அவரைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் உலகில் யாருக்கும் கிடையாது.
*
கடினமான சொல் எதையும் சொல்ல வேண்டாம். உதடுகளை மூடிக் கொண்டு இதயங்களைத் திறந்து வையுங்கள்.
*
ஆன்மிகத்தைப் புறக்கணித்துவிட்டு, மேலைநாட்டு நாகரிகத்தின் பின்னால் சென்றால், நம் சமூகமே அழிந்து போகும். இது நூறு சத உண்மை.
*
ஆன்மிகம் என்னும் அஸ்திவாரத்தின் மீது தான் நம் நாடு என்னும் கட்டடம் எழுப்பப்பட்டுள்ளது. ஆன்மிகமே நமது பண்புகளை மேல்நோக்கி கொண்டு செல்கிறது.
*
கர்வம் தலை தூக்கி நின்றால் நம்மால் எந்தச் செயலையும் சாதிக்க முடியாது. முதலில் கீழ்ப்படியக் கற்றுக் கொள்ளுங்கள்.
*
கடவுள் எல்லா உயிரிலும் குடிகொண்டிருக்கிறார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக