வியாழன், 19 செப்டம்பர், 2013

ஆசிரியரின் இன்றியமையாத பணி

                         ஆசிரியரின் இன்றியமையாத பணி
  மாணவன்  இன்று தன்னுடைய ஆசிரியர் தனக்குக் கீழ்தான் இயங்கவேண்டும் என எதிர்பார்க்கிறான்.சட்டங்களும் அதற்கேற்றாற்போல் செயல்பட்டு வருகின்றன. பள்ளியில் கல்வியும், ஒழுக்கமும் கற்றுக்கொடுக்க வேண்டிய ஆசிரியர்கள் மாணவர்களின் இன்றைய நிலைகண்டு மனம் வருத்தமடைந்துள்ளனர்.
இன்றைய காலகட்டத்தில் வீட்டில் பெரியவர்கள் இல்லாத சூழ்நிலையில் பெற்றோர் இருவரும் பணிக்குச் சென்று விடுகின்றனர். அதனால் குழந்தைகள் கணினி, தொலைபேசி, நண்பர்கள், தொலைக்காட்சி இவற்றின் வாயிலாக உலகைக் காண்கின்றனர். இது சரி, இது தவறு என ஆசிரியர்கள் எடுத்துக் கூறியும் தவறைத் திருத்திக்கொள்ளாமல் மாணவர்கள் இருக்கும்நிலை வருந்தற்குரியது.
நல்ல புத்தகங்கள் மட்டுமே மாணவனை நல்வழிப்படுத்தக்கூடியது என்பதை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உணர்த்துதல் அவசியம்.
புத்தகங்களைப் படிக்க ஆசிரியர் ஊக்குவிக்கவேண்டும். நல்ல கதைகளை ஆசிரியர்கள் வகுப்பறையில் ஓய்வு நேரங்களில் கூறவேண்டும். வாழ்க்கைக்குத்தேவையான செய்திகளை அவர்களுடன் கலந்து உரையாடவேண்டும். சமூகத்தில் நடைபெறும் விஷயங்கள் குறித்து அவர்கள் பார்வையில் எவ்வாறு தெரிகிறது என்பதையும், நீ இந்த இடத்தில் இருந்தால் என்ன செய்வாய்? என அவர்களைக் கேட்டுப் பேச வைக்கவேண்டும். வெறும் புத்தக அறிவை மட்டும் ஆசிரியர்கள் இன்றளவில் போதிப்பது  கண்ணாடி அறைக்குள் இருந்து பாடம் கற்பிப்பது போன்றது.  பாடம்சார்ந்த பொது அறிவினையும் மாணவர்களைப் பேச வைப்பது ஆசிரியரின் இன்றியமையாத பணி. அப்போதுதான் தான் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையின் பொருள் குறித்து மாணவனுக்குத் தெரியும். ஒவ்வொரு நாடுகளிலும் மாணவனின் வாழ்க்கைநிலை வேறுமாதிரியான நிலையில் உள்ளது. அதனால் மாணவனுடன் பழகும் இதர மாணவர்கள் அவர்களுடைய வாழ்க்கைமுறையினை இவர்களுக்குக் கற்றுத் தரும்படி நேரலாம். இதனால் மாணவனுக்கு இது சரி, இது தவறு  எனப் புரிந்து வாழும் மனப்பக்குவத்தை அறியக் கற்றுத் தரவேண்டும். பணம் மட்டுமே வாழ்வின் மகிழ்ச்சிக்குக் காரணம் என்ற போக்கினை மாற்றிப் பிறரை மகிழ்விக்கச்செய்வதே உண்மையான வாழ்வின் பொருள் என்பதை ஆசிரியர் உணர்த்தல் அவசியம்.
ஆடம்பரமான பொருளின் மீது ஆசை, பார்க்கும் எல்லாவற்றையும் தனதாக்கிக் கொள்ளத் துடிக்கும் எண்ணம்  இவை அனைத்தையும் ஆசிரியர்கள் மாணவர்களின்  மனதிலிருந்து நீக்கப் பாடுபடவேண்டும்.இன்று செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாயும் நாம் உழைத்துச் சம்பாதித்தது தானா? இதை நாம் செலவு செய்வது நியாயமானதுதானா? என்பதை ஆசிரியர் மாணவனுக்கு அறியச் செய்ய வேண்டும். இதை உணர்த்துவது ஆசிரியரின் கடமை.  தமது குழந்தை கஷடப்படக்கூடாது என்பதற்காகக் கேட்கும் வசதிகளை எல்லாம் அளித்தால் அம்மாணவன் பிற்காலத்தில் உழைத்து வாழ வேண்டும் என்பதை மறந்து போவான் என்பதைப் பெற்றோரும் உணர்ந்து வாழ வேண்டும்.  
ஆசிரியர்கள் இன்று கற்பிப்பதிலிருந்து தவறினால் நாடு நாளை தூங்கும்.