வெள்ளி, 31 ஜனவரி, 2014

அன்பு மகளுக்கு.

சுப்ரபாரதிமணியன்.,
நேரு தன் மகள் இந்திராவிற்கு எழுதிய கடிதங்களின் தொகுப்புதான்கண்டுணர்ந்த இந்தியா “. (டிஸ்கவரி ஆப் இந்தியா )
இன்று நீ கண்டுணர்ந்த இந்தியா, கண்டுணரும் இந்தியா என்று நான் குறிப்பிடும் விசயங்கள் கசப்பானவை. ஆனாலும் பகிர்ந்து கொள்ளத்தானே வேண்டும்.
மங்கையராய் பிறப்பதற்கே நல்ல
மாதவஞ் செய்திட வேண்டும், அம்மா
பங்கயக் கைந்நலம் பார்த்தலவோ- இந்தப்
பாரில் அறங்கள் வளரும் ,அம்மா “ ( கவிமணி தேசிக விநாயகம் )
மாபாதகம் செய்தவர்களாக இந்திய இளம் பெண்கள் மாறிப் போய் விட்டார்கள்.1. கவுரவக் கொலைகள் 2, அகவுரவக் கொலைகள்…..தொடர்கின்றன.
இளம் பெண்களின் காமம் சேர்ந்த காதல் அவர்களை சீரழித்து விடுகிறது.தனிமை தரும் உற்சாகம் எல்லை மீறி அவர்களைச் சிதைக்கிறது.
இதை மீறி காதல் என்ற அனுபவமோ அல்லது திருமணம் என்ற நிகழ்வோ அவர்களை புதிய உலகிற்குள் கொண்டு செல்கிறது. இந்த அனுபவத்தை மன முதிர்ச்சியுடன் அணுகும் இளம் பெண்கள் கவுரவமான வாழ்க்கையை மேற்கொள்கிறார்கள். அல்லாதோருக்கு கவுரவக் கொலைகள் என்ற பெயரில் சித்ரவதைகள் தொடர்கின்றன.பெண்கள் மீதான பாலியல் வன்முறை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது காவல்துறையினரின் வழக்காய் மாறாத வரைக்கும் கண்ணாமூச்சி காட்டி மறைந்து போகிறது.
புது தில்லியில் நிர்பயா ( பயமற்றவள் ) விற்கு நேர்ந்த பாலியல் வன்முறைக்குத் தீர்வாக வழக்கு எட்டு மாதங்கள் முடிந்து தீர்ப்பு வந்திருக்கிறது. 18 வயதிற்கு குறைவான ஒருவரைத் தவிர மீதி நான்கு பேருக்கும் மரணதண்டனை அறிவிக்கப்பட்டிருக்கிறது. தண்டனைகள் எந்தக் குற்றத்தையும் தடுக்குமென்பது முழு உண்மையல்ல. ஆனாலும் தண்டணைகள் நிச்சயம் தேவை. பெண்கள் மீதான பல வல்லுறவுகளில் கொடிய மவுனங்கள் நீடிக்கவே செய்கின்றன, நடத்தை கெட்ட பெண்கள் என்ற முத்திரையைக் குத்தி பாலியல் உறவு கொண்டு தூக்கி எறியப்படும் பெண்களின் வழக்குகள் நிறைய உள்ளன.
நிர்பயா வழக்கைப் போல் எழுச்சிகளும், சரியான தீர்ப்புகளும் எல்லா வழக்குகளிலும் வெளிப்படவேண்டும்.பெண் என்ன வகை உடையை உடுத்த வேண்டும், எதைப் படிக்க வேண்டும், ஆண்களுடன் நட்பு கொள்ளலாமா, திருமணம் இன்றி வாழலாமா, எந்த மாதிரியான வேலைக்குப் போகலாம், தன் மீதான வன்முறையை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி சிந்திக்க சுதந்திரமும், கட்டுப்பாடின்மையும் விரிந்து கிடக்கின்றன.

சமூகத்தின் வன்மத்தின் வன்முறையை எதிர் கொள்ள சரியான கல்வியும், பகுத்தறிவும் வழிகாட்டும்…. கல்வி என்பதில் அரசியல் கல்வி முதல் சமூக அனுபவங்கள் வரை எல்லாம் உள்ளடங்கும். அந்த அனுபவத்தை நீ இப்போதைக்கு புத்தகங்கள் மூலம் பெற முடியும். வாசிப்பு தரும் அனுபவம் மன எழுச்சிக்கோ, போராட்ட எண்ணங்களுக்கோ சரியாக வழிகாட்டும்புத்தகங்களிலிருந்து நீ ஆரம்பி மகளே.

திங்கள், 27 ஜனவரி, 2014

புத்தகத்தின் மகிழ்ச்சி உரசல்

                                         புத்தகத்தின் மகிழ்ச்சி உரசல்
மௌனமாய்க் கிடந்த
என்னுள் பிரளயம்
கலந்த உற்சாக அலைகள் ஆரம்பம்!
சலசலத்த தாளின்
சலங்கைஒலி சப்திக்க
நாமகளின்  அமிர்தவர்ஷிணி ஆரம்பம்!
கணக்கியல் புள்ளியலின்
கணக்குக் கோலம்
தலைமுறை வேதனை தொடராதிருக்க
விரித்த விழியினில்
வேதனை படராதிருக்க
விடாப்பிடியான சிலந்தியின்
நூலாட்டம் அறுபட்ட வேதனையின்
விளிம்பில் புரியாத மனிதரிடையே
புரிய வைக்க மறந்தநிலை
உருவாகிய நிலையினிலே
என்னுள் மலர்ந்த
மல்லிகையின் வாசம்
உலகெங்கும் மணக்க
நினைக்கும் பூபாளம்
ஆரம்பம்!

இன்னொரு ராபர்ட் புரூசின்
கதைக்குத் தொடங்கவிருக்கும்
மகாபாரதப்போரின்
முழக்கம் எதிரொலிக்காமல்
சலசலத்த தாளில்
முகம் புதைத்தபடி
வீணையின் இனிய நாதம்
ஆரம்பம்!


வெள்ளி, 24 ஜனவரி, 2014

அசையாதா அரசியல் தேர்?-கவிதை் திறனாய்வு



..அசையாதா அரசியல் தேர்?
தேர் வலம் வந்தால்
தேசமெங்கும் பசுமை
தேர்த்தட்டுகள் ததும்ப
இலவச பிரசாதங்கள்!
தேர்வடம் பிடிக்க
மறந்த இளைய சமுதாயங்கள்!
சக்கரங்களில் சிக்கிய
கையூட்டுப் பாறைகள்!
உடைக்கத் தவறிய
நெம்புகோல் சட்டங்கள்!
நேர்மை எனும்
அச்சாணியை வைக்க
மறந்தவர்கள்
எங்கு சென்றனர்?
தேரோட்டி சல்லியனாய்
யார் இங்கே வருவார்?
போருக்காக அங்கே
கண்ணன் தேரில்
காத்திருக்கிறான் !
அசையாதா இந்த அரசியல் தேர்?-

கவிதையைத் திறனாய்வு செய்க.

பயிற்சித்தாள்-1 -std



பயிற்சித்தாள்-1 -std
·         மாறுபட்ட சொல்லை வட்டமிடுக.
கூரை
பாறை
தேரை
நாரை
·         இ- சொல் உச்சரிப்பை வட்டமிடுக.
தொப்பி
சேலை
வண்டு
கம்பு
·         காயின் பெயரை வட்டமிடுக.
மாங்காய்
பலாப்பழம்
மல்லிகைப்பூ
தென்னைமரம்



புதன், 22 ஜனவரி, 2014

இலக்கணத்தைக் கற்பிக்கும் ஆசிரியர்

முனைவர் க.துரையரசன்
நோக்கம்:
                இலக்கணத்தைக் கற்பிக்கும் ஆசிரியர் மாணவரிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தி விடக்கூடாது. இலக்கணம் கணக்கு மாதிரிக் கடுமையானது. கணக்கைப் படிநிலை (Steps) தவறாமல் தொடர்ந்து கவனித்தால்தான் புரியும். அது போலத் தான் இலக்கணமும்; கணக்கு பிணக்கு ஆமணக்கு; இவை போன்று கூறி தமிழ் இலக்கணத்தைத் தொடங்குகின்ற ஆசிரியர்கள்தான் இன்று நிரம்ப உள்ளனர். இவ்வாறு கூறினால் ஆர்வமுடன் பயில்வதற்கு எவரும் முன் வரார். எனவே, தமிழ் இலக்கணத்தை மாணவர்களுக்குப் புரியும் வண்ணம் – அதே நேரத்தில் மரபுக்கு இழுக்கு நேராத வண்ணம் கற்பிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அவ்வகையில் தொல்காப்பியம் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள் குறித்து இங்கு எடுத்துரைக்கப்படுகிறது.
                இன்றைய சூழ்நிலையில் இலக்கண நூற்பாக்களை மனப்பாடம் செய்து ஒப்பித்தல், எழுதுதல், நூலில் உள்ள உதாரணங்களேயே எழுதச் சொல்லுதல் ஆகிய நிலையில் மட்டுமே தமிழிலக்கணம் கற்பித்தல் நின்று போய் விட்டது. ‘இலக்கணம் என்பது பழைய மொழிக்கு விளக்கம் கூறும் மரபிலக்கண நூற்களின் செய்திகள் மட்டுமல்ல. அன்றாடம் நாம் பேசும் எழுதும் மொழியின் அமைப்பையும் ஒழுங்கு நெறியையும் கூறுவதாகும்’ என்பது மொழி வல்லுநர்களின் கருத்தாகும்.
மேலும், காலந்தோறும் மொழியானது மாறுதலுக்குட்பட்டது. எனவே மரபிலக்கணத்தைச் சொல்லிக் கொடுக்கும்போதே, தற்போது மொழியின் நிலை என்ன என்பதையும் விளக்கி மாணவர்களுக்கு வேறுபாட்டை உணரும் திறனை ஏற்படுத்த வேண்டும்.
புதிய அணுகுமுறைகள்
      இலக்கணம் கற்பித்தலில் பழைய அணுகுமுறைகளை விடுத்துக் கீழ்க்கண்ட புதிய அணுகுமுறைகளைப் பின்பற்றலாம்.
  • நடைமுறை எடுத்துக்காட்டுகளைக் கூறுதல்
  • மாணவர்களுக்குப் புரிகிற மாதிரியான உதாரணங்களைத் தருதல்
  • மாணவர்களை எடுத்துக்காட்டுகள் கூறச் செய்தல்
  • திரைப்பாடல்களைக் கூறி விளக்குதல்
  • மாணவர்களுக்கு ஆர்வத்தையும் அறிவையும் ஊட்டும் வகையில்
  • சமகாலத்தோடு இலக்கணத்தைப் பொருத்திக் கற்பித்தல்
  • இணைய மூலங்களைப் பயன்படுத்திக் கற்பித்தல்
விரவுப் பெயர்:
      உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவாய் வரும் பெயர் விரவுப்பெயர் எனப்படும். (எ.கா.) சாத்தன், சாத்தி. சாத்தன் வந்தான், சாத்தி வந்தாள், சாத்தி சாந்தரைக்குமாறு வல்லள் என்பன உயர்திணைப் பெயர்கள். சாத்தன் வந்தது, சாத்தி வந்தது என்பன அஃறிணைப் பெயர்கள். இங்ஙனம் சாத்தன், சாத்தி என்பன இரு திணைகளுக்கும் பொதுவாய் வருவதால் இவை விரவுப் பெயர்களுக்குக் காலங்காலமாய் எடுத்துக்காட்டுகளாகக் கூறப்படுகின்றன.
      தாய் வந்தாள், தாய் வந்தது. இங்கு தாய் என்பது விரவுப்பெயராய் வந்துள்ளது. இலட்சுமி வந்தாள், இலட்சுமி (பசு) வந்தது. இங்கு இலட்சுமி என்பது விரவுப் பெயராய் நின்றது. இது போல் நம் செல்ல (Pet Animals) விலங்குகளுக்கு இடுகின்ற உயர்திணைப் பெயர்கள் எல்லாமே விரவுப் பெயர்களாய்ப் பெரிதும் அமைந்துள்ளன. எனவே விரவுப் பெயருக்கான எடுத்துக்காட்டான சாத்தன், சாத்தியை விட்டு சற்று நகர்ந்து தாய், இலட்சுமி – இன்னும் இது போன்ற விரவுப் பெயர்களைக் கூறவும் கண்டறிந்து கற்பிக்கவும் முற்பட வேண்டும்.
ஆகுபெயர்:
      ஒன்றன் பெயர் மற்றொன்றுக்குத் தொன்றுதொட்டு ஆகி வருவது ஆகுபெயர் ஆகும். ஊர் சிரித்தது என்பது இடவாகு பெயருக்கு எடுத்துக்காட்டாகும். இதனையே கூறிக் கொண்டிராமல், கல்லூரிக்குப் பேருந்தில் வருகின்ற மாணவர்கள் கல்லூரியின் பெயரைச் சொல்லியும், திரைப்படம் பார்க்கச் செல்வோர் திரையரங்கின் பெயரைச்சொல்லியும், எந்த ஊருக்குச் செல்கிறோமோ அவ்வூரின் பெயரைச் சொல்லியும் பேருந்துகளில் பயணச்சீட்டுப் பெறுவது வழக்கம். இவற்றையே இடவாகு பெயருக்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். எ.கா. ‘காலேஜ் ஒன்னு கொடு’. இதில் காலேஜ் என்பது இடவாகு பெயராகும். இதனைப் போலவே வகுப்புக்குக் காலதாமதமாக வரும் மாணவனை, ‘லேட்டு இங்க வா’ என்று விளையாட்டாக அழைக்கலாம். இங்கு ‘லேட்டு’ என்பது காலவாகு பெயராகும். வெள்ளையா இங்க வா என்பது பாண்பாகு பெயர் ஆகும். வத்தல் இங்கு வா என்பது தொழிலாகு பெயர் ஆகும்.
தொகைச் சொற்கள்:
  • வினைத்தொகை: ‘ஊறுகாய்’ என்பது வினைத்தொகைக்கு விளையாட்டாக ஆசிரியர்கள் கூறும் எடுத்துக்காட்டாகும். இது போன்றே சுடுசோறு, சுடுநீர், இடுகாடு, சுடுகாடு, அரிவாள், வெட்டுகத்தி போன்ற எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். இத்தகு வினைத்தொகை சொற்களை மாணவர்களிடத்துக் கேட்டால் நிறைய எடுத்துக்காட்டுகள் கிடைக்கும்.
  • உம்மைத்தொகை: இரவு பகல், தாய் தந்தை, அண்ணன் தம்பி, அக்கா தங்கை, பேனா பென்சில், நோட்டு புத்தகம், பூரி கிழங்கு,  சட்னி சாம்பார், டீ காபி போன்றவற்றை உம்மைத்தொகைக்கு எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம்.
  • வேற்றுமைத்தொகை: ‘கல் எறிந்தான்’ – கல்லை எறிந்தான் (இரண்டாம் வேற்றுமைத் தொகை), கல்லால் எறிந்தான் (மூன்றான் வேற்றுமைத் தொகை) உரையாசிரியர்கள் காட்டும் உதாரணம். ஆசிரியர் பாடம் நடத்தினார், மாணவர் பாடம் கேட்டார், தயிர்ப் பானை, மோர்ப்பானை, பால்சட்டி போன்ற எடுத்துக்காட்டுகளை இரண்டாம் வேற்றுமைத் தொகைக்கும், அரிவாள் வெட்டு, கத்திக்குத்து, பொற்குடம், தங்கத்தாலி, தங்கத்தோடு, வெள்ளித்தட்டு போன்ற எடுத்துக்காட்டுகளை மூன்றாம் வேற்றுமைத் தொகைக்கும் சான்றாகக் காட்டலாம். வயிற்று வலி, கழுத்து வலி, பல் வலி, அவன் தம்பி போல்வன நான்காம் வேற்றுமைத்தொகைக்கு எடுத்துக்காட்டுகளாகும். பிறவற்றிற்கும் இங்ஙனம் எடுத்துக்காட்டுகளைத் தரலாம்.
தொடை நயங்கள்:
      முதல், இரண்டு, கடைசி எழுத்துகள் ஒன்றி வருவது முறையே மோனை, எதுகை, இயைபு எனப்படும். இதற்குச் செய்யுட் பகுதிகளிலிருந்து மட்டுமே எடுத்துக்காட்டுகள் கூறும்பொழுது மாணவர்களுக்கு சலிப்பு ஏற்படும். எனவே, கீழ்க்காண்பவைப் போன்று சுவையான எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்.
மோனை:
ராக்கு முத்து ராக்கு – புது
ராக்குடியை சூட்டு
கண்ணோடு காண்பதெல்லாம் – தலைவா
கண்களுக்குச் சொந்தமில்லை
மாணவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டி அவர்கள் புரிந்து கொண்ட பிறகு,
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
போன்ற இலக்கியச் சான்றுகளைக் காட்டினால் எளிதில் மாணவர்கள் புரிந்து கொள்வார்கள்.
எதுகை: 
பாண்டியனின் இராஜ்ஜியத்தில் உய்ய லாலா
வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்ய லாலா
கண்ணோடு காண்பதெல்லாம் – தலைவா
கண்களுக்குச் சொந்தமில்லை
இயைபு:
ராக்கம்மா கையத் தட்டு – புது
ராகத்தில் மெட்டுத் தட்டு
ஊதா கலரு ரிப்பன் – யாரு
உனக்கு அப்பன்
முரண்:
புதிய வானம் புதிய பூமி
எங்கும் பனிமழை பொழிகிறது
அந்தாதி:
வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்
நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் வளர்வதற்குக் காமனவன் மலர்க்கணைகள்
அடி வகைகள்:
அடி வகைகளை விளக்குவதற்குச் செய்யுள்களை உதாரணம் காட்டுவதற்கு முன்பாக சாதாரண வாக்கியங்களைக் காட்டலாம்.
நான் வந்தேன் – குறளடி
நான் கலலூரிக்கு வந்தேன் –  சிந்தடி
நான் இன்று கல்லூரிக்கு வந்தேன் – அளவடி
நான் இன்று எங்கள் கல்லூரிக்கு வந்தேன் – நெடிலடி
நான் இன்று எங்கள் கல்லூரிக்கு வந்து சென்றேன் – கழிநெடிலடி
விளி வேற்றுமை:
அன்னை – அன்னாய்,  தந்தை – தந்தாய், நங்கை – நங்காய், மங்கை – மங்காய் என்று அழைப்பது விளியாகும்.
அண்ணன் – அண்ணா, தம்பி – தம்பீ, அண்ணி – அண்ணீ, கண்ணன் – கண்ணா என்பன போன்ற உதாரணங்களைக் கூறலாம்.
அணி:
  • தற்குறிப்பேற்ற அணி
இயல்பாய் நடக்கும் ஒரு செயலில் கவிஞன் தன் கற்பனையை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி ஆகும். இதற்கு ஆசிரியர்கள் பெரிதும்
   ‘போருழந்தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி வாரல் என்பன போல் மறித்துக் கைகாட்ட’ என்ற சிலப்பதிகார வரியையே மேற்கோள் காட்டுவார்.
முகிலினங்கள் அலைகின்றன
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தொலைந்ததனால்
அழுதிடுமோ அது மழையோ?
என்ற திரைப்பாடலைக் கூறினால் மாணவர்களுக்குத் தற்குறிப்பேற்ற அணி வாழ்நாள் முழுவதும் மறக்காமல் இருக்கும்.
  • சொற்பொருள் பின்வருநிலை அணி  – ஒரு செய்யுளில் ஒரே சொல் திரும்பத் திரும்ப ஒரே பொருளில் வருவது.
அத்திக்காய் காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே
உன்னைப்போல் பெண்ணல்லவோ
சின்ன சின்ன ஆசை
சிறகடிக்க ஆசை
முத்து முத்து ஆசை
முடிந்து விட்ட ஆசை
முடிவுரை:
            இன்றைய தலைமுறை மாணவர்கள் புதிய புதிய செய்திகளை நாடிச் சென்று கொண்டுள்ளனர். அவர்களிடத்து தமிழ் மொழியின் மரபையும் மாண்பமையும் கூறி அவற்றைக் காத்திட வேண்டியதன் இன்றியமையாமையைச் சுட்டிக்காட்ட வேண்டும். முள்ளை முள்ளால் எடுப்பது போலவும், யானையால் யானை யாத்தற்று போலவும் (கும்கி யானை போல) அவர்கள் விரும்புகின்ற வழியில் – பாதையில் சென்று அவர்களுக்குத் தமிழ் இலக்கணத்தைப் பயிற்றுவிப்பதுதான் சாலச்சிறந்தது. அதே வேளையில் அவர்களுக்குத் தமிழ் இலக்கணத்தில் ஈடுபாடும் புரிதலும் ஏற்பட்ட பிறகு மரபார்ந்த எடுத்துக்காட்டுகளைக் கூறி மரபு வழி இலக்கணம் கற்றல் கற்பித்தல் முறையைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான்,
ஏடன்று கல்வி சிலர் எழுதும் பேசும்
இயலன்று கல்வி; பலர்க் கெட்டா தென்னும்
வீடன்று கல்வி; ஒரு தேர்வு தந்த
விளைவன்று கல்வி; அது வளர்ச்சி வாயில்

என்ற கவிஞர் குலோத்துங்கனின் கவிதை வரிகள் உண்மையாகும்.

செவ்வாய், 21 ஜனவரி, 2014

பெண்ணுலகப் படைப்புகள்



பெண்ணுலகப் படைப்புகள்
ஒருவருடைய உணர்ச்சி வெளிப்பாடுகள் தொல்காப்பியர் எழுதிய மெய்ப்பாடுகளாக வெளிப்படுகின்றன.
மனதில் எழும் இத்தகைய எண்ணங்களே கதை, கவிதை,கட்டுரை இவற்றின் வழி ஆராய்ச்சியாளருக்கும்,கவிஞனுக்கும்,கதாசிரியனுக்கும் கருப்பொருளாக அமைகிறது. உள்ளத்துள் எழும் எண்ண உணர்ச்சிகளை அடக்கி வெளிக்கொணரும் இடமாகப் படைப்புகள் அமைகின்றன. இதனால் பெண்ணுலகம் படைக்கும் அனைத்தும்  அவளது வாழ்க்கையில் நிகழ்ந்தவை என ஆணுலகத்தினால் வரையறுக்கப்பட்டுள்ளதை அறுதியிட்டு ஏற்கஇயலாது. பெண்கள் இவ்வுலக வாழ்க்கையில் தமது பெரும்பங்கு படைப்புகளைச் சில காரணங்களினால் பெருமளவில்
வெளிக்காட்ட விரும்புவதில்லை. காரணம் பெண் படைக்கும் படைப்புகள் யாவும் அவளது எண்ணங்களையும், அவளது சமூகத்தையும் இணைத்தே படைக்கப்படுகின்றன என்பது போன்ற தவறான கருத்துகள் மண்டிக் கிடக்கின்றன.
ஆனால், இக்கூற்றுகள் ஒருசில நிகழ்வுகளை மட்டுமே உள்ளடக்கி ஏனைய செய்திகள் படைப்பாளரின் கற்பனைத்திறனுடன் இணைந்தததாகக் கருதுவதற்கான இடமுண்டு. ஒவ்வொரு படைப்பாளருக்கும் படைப்பாக்கத்தை வெளிக்கொணரும் விதத்தில் அவரது எண்ண ஓட்டங்கள் தடைபடாதிருக்கும்பொருட்டு தமது வாழ்வில் பதிந்த ஏதாவது ஒரு நிகழ்வு அழியாமல் பதிந்து விடுவதுண்டு. அக்கருத்து வெளியாகின் சமூகத்திற்கு நன்மை விளையும் என்ற நோக்கினில் அமைக்கப்பட்டிருக்கலாம்எனக் கருதலாம்.